அகலிகைப் படலம் - 542

bookmark

கழனிகளின் சிறப்பு

542.

பட்ட வாள் நுதல் மடந்தையர்.
   பார்ப்பு எனும் தூதால்.
எட்ட ஆதரித்து உழல்பவர்
   இதயங்கள் கொதிப்ப.
வட்ட நாள் மரை மலரின்மேல்.
   வயலிடை மள்ளர்
கட்ட காவி அம் கண்கடை
   காட்டுவ - கழனி.
 
கழனி   -  (அந் நாட்டு)  வயல்களில்; பார்ப்பு எனும்   தூதால்-
தங்கள்  பார்வையாகிய  தூதால்; எட்ட ஆதரித்து - (தம் கணவரைச்)
சேர்வதற்கு  விரும்பி; உழல்பவர் - சஞ்சரித்துத் திரிபவராகிய; பட்டம்
-   நீர்நிலையி்லுள்ள;  வாள்நுதல் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய;
மடந்தையர்   இதயங்கள் -  உழவ  மகளிரின்  மனம்;  கொதிப்ப .
வெறுப்பு  அடையுமாறு; வயலிடை மள்ளர் - வயல்களிலே உழவர்கள்;
வட்ட நாள்மரை  மலரின்  மேல் - வட்ட வடிவமான புதிய தாமரை
மலர்களின்மேல்;  கட்ட  காவி  -  களை பறித்தெறிந்த கருங்குவளை
மலர்களாகிய;  அம்கண் கடை - அழகிய கடைக்கண்களை; காட்டுவ -
வெளிப்படுத்துகின்றன.  

வேறு  உரை: உழத்தியரின் பார்வைத் தூதால் மயங்கி அவர்களைச்
சேர   விரும்பும்   ஆடவர்  மனம்  வெறுக்குமாறு  வயல்களில் புதிய
தாமரை   மலர்களின்மேல்   அம்மகளிர்  களைந்து  எறிந்த  குவளை
மலர்கள்    (பெண்களின்)     கண்களின்    கடைப்    பகுதிகளைக்
காட்டுகின்றன.  ஆடவர்   வெறுப்புக்குக்  காரணம்:  தாமரை  மலரில்
பொருந்திய குவளைப்  பூக்களை நோக்கித் தம்மைக் குறிப்பினால் கண்
காட்டி  அழைக்கின்ற   முகமென  மயங்கி  அவற்றின் அருகில் வந்த
ஆடவர்கள்   உண்மையறிந்து   வெறுத்தனர்.  மயக்க  அணி:  தமது
குளிர்ந்த  கண்  பார்வையால்   உழவரைத்  தம் வசப்படுத்தித் தழுவ
வந்த  உழத்தியர்  அவ்வயலெங்கும்   தாமரைமேல் கருங்குவளைமலர்
படிந்திருப்பதைக்  கண்டு.  தமக்கு   முன்னரே   அந்த உழவர்களைக்
கவர்வதற்கு     வேறுசில    மகளிர்     அவர்களைக்    கண்களால்
நோக்குகின்றார்களென  மயங்கினார்கள்:   இனி  தமது  எண்ணம் கை
கூடுமோ  கூடாதோ  என்ற  ஐயத்தின் மிகுதியால் மனம்  வெறுத்தனர்
எனக் கொள்ளலாம்.                                         8