அகலிகைப் படலம் - 509
மூவரும் கங்கையைக் காணுதல்
509.
அங்கு நின்று எழுந்து.
அயன் முதல் மூவரும் அனையார்.
செங் கண் ஏற்றவன் செறி சடைப்
பழுவத்தில் நிறை தேன்
பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால்.
பொன்னியைப் பொருவும்
கங்கை என்னும் அக் கரை பொரு
திரு நதி கண்டார்.
அயன்முதல் மூவரும் அனையார் - (கதிரவன் உதயமானவுடன்)
பிரமன் முதலாகிய மும்மூர்த்திகளையும் ஒத்தவராகிய விசுவாமித்திரன்
முதலான மூவரும்; அங்கு நின்று எழுந்து - அச்சோலையிலிருந்து
புறப்பட்டு; செங்கண் ஏற்றவன் - சிவந்த கண்களைக் கொண்ட
காளையை ஊர்தியாகவும் கொடியாகவும் உடைய சிவனது; செறிசடைப்
பழுவத்தில் - அடர்ந்த சடையாகிய காட்டிலுள்ள; நிறை தேன்
பொங்கு - நிறைந்த தேனொடு விளங்குகின்ற; கொன்றை ஈர்த்து
ஒழுகலால் - பொன்னிறமுள்ள கொன்றை மலரை இழுத்துக் கொண்டு
பெருகுவதாலே; - பொன்னியைப் பொருவும் - (பொன்னி என்னும்
பெயரொடு பொன்னைக் கொழிந்து வரும்) காவிரி நதியை ஒத்துள்ள;
கங்கை என்னும் - கங்கை என்கிற; அக்கரை பொரு - அந்த இரு
கரைகளிலும் மோதுகின்ற; திருநதி கண்டார் - அழகும் மேன்மையும்
மிக்க ஆற்றைக் கண்டனர்.
காவிரி - கங்கை: திருமாலின் பரம பதத்திற்கு அருகிலுள்ள விரசை
நதிபோல விளங்குவது காவிரி. இது நிலவுலகில் திருவரங்கத்தின் இரு
பக்கங்களிலும் மாலைபோலச் சூழ்ந்துள்ளது. இத்தகைய சிறப்புடைய
காவிரி கங்கைக்கு உவமையாயிற்று. அயன் முதல் மூவர்: பிரம்ம
ரிஷிப் பட்டத்தை அரிய முயற்சியால் பெற்ற விசுவாமித்திரனுக்குப்
பிரமனும். திருமாலின் அவதாரச்சிறப்புடைய இராமனுக்கு வி்ஷ்ணுவும்.
மிக்க கோபமுள்ள இலக்குவனுக்கு அழிக்குங் கடவுளான உருத்திரனும்
உவமையாயினர். 5
