பாம்பிற்கு பிராமணன் இட்ட சாபம்

பாம்பிற்கு பிராமணன் இட்ட சாபம்

bookmark

ஒரு பெரிய கானகத்தில் மந்தவிஷன் என்கிற பாம்பு ஒன்று, ஒரு நாள் இரையைத் தேடிச் பார்த்தும் ஏதும் கிடைக்காததால் சோகமாக ஓர் ஏரிக்கரைக்கு அருகில் வந்து அமர்ந்தது. அந்த ஏரியில் நிறைய தவளைகள் இருந்தன. இந்தத் தவளைகளை எப்படியாவது தந்திரமாகப் பிடித்து உண்டுவிட வேண்டும் என்று திட்டமிட்டது. 

அப்போது அந்தப் பக்கம் வந்த தவளையொன்று ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. அதற்கு பாம்பு இன்று காலையில் நான் இரைதேடி செல்லும் வழியில் ஒரு தவளை குறுக்கே சென்றது. நான் அதைப் பிடிக்க சென்றேன். அப்போது ஒரு பிராமணன் மகன் புதரின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். நான் தேடிவந்த தவளை என்று நினைத்து, அந்தப் பிராமணனின் பிள்ளையுடைய பாதத்தைக் கடித்து விட்டேன். அவன் இறந்துவிட்டான். அதனால் கோபம் கொண்ட பிராமணன் என்னைச் சபித்துவிட்டான் என்றது பாம்பு. 

அந்தப் பிராமணன் நீ, இனிமேல் தவளைகளுக்குச் சேவைசெய்து வாழக் கடவாய் என்று சபித்துவிட்டான். நான் இந்த ஏரிக்கரையில் உள்ள தவளைகளுக்குச் சேவகம் செய்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியது. அந்தத் தவளை, தவளை ராஜாவிடம் கூறியது. அனைத்துத் தவளைகளும் ஏரியைவிட்டு வெளியே வருமாறு உத்தரவிட்டது. ஏ பாம்பே! அனைத்துத் தவளைகளையும் உன் முதுகின் மீது ஏற்றிக் கொண்டு செல்! என்று கட்டளையிட்டது.  

உடனே, பாம்பு மிகவும் பவ்வியமாக தவளைகளைத் தன் முதுகில் சுமந்து சென்றதில் பாம்பு சோர்வாகி விட்டது. தவளை ராஜா பாம்பிடம், ஏன் சோர்வாக இருக்கிறாய்? என்று விசாரித்து. எனக்கு மிகவும் பசிக்கிறது என்றது பாம்பு. இனிமேல் நீ சிறிய தவளைகளைப் பிடித்து உண்டுகொள் என்று உத்தரவிட்டது. 
தவளை ராஜா கூறியதைப் போலவே அந்தப் பாம்பு சிறிய தவளைகளைச் சாப்பிட்டுக் கொண்டும் பெரிய தவளைகளைச் சுமந்து கொண்டும் காட்டில் திரிந்தது. அப்போது அந்தக் காட்டிற்குள் நுழைந்த ஒரு புதிய பாம்பு இதைப் பார்த்து ஏன் உன் முதுகில் சுமந்து கொண்டு செல்கிறாய் என்று கேட்டது. அதற்கு அந்தப் பாம்பு, எல்லாம் காரணமாகத்தான்! காலம் கடந்தபின் உனக்கே தெரியும் என்றது. 
சில நாட்களில் அந்தப் பாம்பு தவளைகளை ஏமாற்றி அனைத்துத் தவளைகளையும் உண்டு விட்டது. இறுதியாகத் தவளை ராஜாவையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டது.  

நீதி : தனது புத்தியால் தன் எதிரியை அனுசரித்து செல்வது போல் அனுசரித்து சென்று புத்தியால் வெல்ல வேண்டும்.