பள்ளிபடைப் படலம்

அயோத்தியா காண்டம்
இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. இதனால் இதற்கு அயோத்தியா காண்டம் என்று பெயர். அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
பள்ளிபடைப் படலம்
(தயரத மன்னனை ஈமப் பள்ளியில் சேர்த்த செய்தியைக் கூறுவது ஆதலின் பள்ளிபடைப்படலம் எனப்பெற்றது. பள்ளி என்பது ஈமப்பள்ளி ஆகும். கல்வெட்டுகளில் இது பள்ளிபடைஎன வருகின்றது.
வசிஷ்ட முனிவனால் அனுப்பப் பெற்ற, தூதர் பரதன் தங்கியுள்ள கேகய நாட்டை அடைந்தனர். ஒலையைக் கொடுத்தனர். அது கண்ட பரதன் கோசல நாடு அடைகின்றான். அவலத்தில் ஆட்பட்டுப் பொலிவழிந்த கோசல நாட்டையும் அயோத்தியையும் கண்டு திகைக்கின்றான்.
கைகேயி மூலமாக நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து மனங் கலங்குகிறான்; தாயைவெறுக்கின்றான்; தன்னையே நொந்துகொள்கிறான்; கோசலை திருவடியில் பணிகிறான். வசிஷ்ட முனிவனால் தன்னைத் தந்தை மகனல்லன்என நீக்கியது அறிந்து மனம் மாழ்கிறான். முனிவன் கருத்துப்படி சத்ருக்கனனால் தந்தைக்குரிய ஈமக்கடன்களை நிறைவேற்றுகிறான்.
பத்து நாள் கிரியைகள் முற்றிய பின்னர் முனிவனும் பிறரும் மந்திரக் கிழவரும் மன்னரின்றி நாடு இருத்தல் தகாது என்று கருதிப் பரதனிடம் வந்து கூடுகின்றார்கள் என்பது வரை உள்ள செய்திகள் இப்படலத்திற் கூறப்பெறுகின்றன.)
கேகய நாட்டுக்கு வஷிஸ்டர் அனுப்பிய தூதுவர்கள் பரதனைக் கண்டனர். அவனிடம் வஷிஸ்டர் கொடுத்து அனுப்பிய ஓலையை கொடுத்தனர்.
"கைமிஞ்சிப் போகின்ற காரியம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது கண்டவுடன் வருக" என்று அதில் வஷிஸ்டர் சுருக்கமாக குறிப்பிட்டு இருந்ததின் பொருளை உணர்ந்து கொள்ளாதவனாக," சரி ஏதோ அரசியல் காரணங்கள் போல, எது எப்படியோ! அண்ணன் இராமபிரானை பார்க்கப் போகிறோம்" என்று நினைத்துக் கொண்டான்.
அண்ணனை, பார்க்க அயோத்தி செல்லப்போகும் களிப்பில், செய்தி கொண்டு வந்த வீரர்களுக்குப் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினான். பிறகு சத்ருக்கனனிடம் அயோத்தியில் இருந்து செய்தி வந்த விவரத்தைக் கூறினான். நேரம், காலம் என எதையும் பார்க்காமல், அண்ணனை வெகு நாட்கள் கழித்துப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் தனது பரிவாரங்கள் சூழ புறப்பட்டான்.
அப்படிச் சென்ற பரிவாரங்களுடன் பரதன் கோசல நாட்டின் எல்லையைக் கடந்தான். அப்போது அயோத்தியைக்கு சில யோசனை தூரத்திலேயே வயல் வெளிகளில் நீர் நீங்கிப் பொலிவு இழந்து இருப்பதைக் கண்டான். அயோத்தியின் கொடிகள் ஏதும் பறக்கவில்லை. மக்களின் முகங்கள் யாவும் கலை இழந்து கிடந்தன. இன்னும் பெரும்பாலான வீதிகளில் மக்களின் நடமாட்டமே இல்லை. சோலைகளில் கூட பூக்கள் மலராமல் மொட்டாக காட்சி தந்தன. இன்னும் பலவகையாலும் அந்நாடு சீரழிந்து கிடந்தது.
இக்காட்சிகளைத் தனது தம்பி சத்ருக்கனுக்குச் சுட்டிக் காட்டினான் பரதன். அது கண்ட சத்ருக்கனன் அண்ணன் பரதனிடம், "அண்ணா! நகரைப் பார்த்தால் ஏதோ துயரச் சம்பவங்கள் நடந்தது போல அல்லவா தோன்றுகிறது. இலக்குமி போய்விட்டது போலவும் இருக்கிறதே!" என்றான்.
பரதனும் "என்ன நேர்ந்ததோ?" என்ற அதே சிந்தனையில் தான் இருந்தான். இப்படி இருக்க வீதியில் சிலர் பரதனைப் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டனர். சிலர் அவனை கோபம் கொண்டு பார்த்தனர். சிலர் கதவுகளை அடைத்துக் கொண்டனர். பரதனுக்கு இவை எல்லாம் வேறுபட்டுத் தோன்றியது,
"எப்போதும் நம்மைக் கண்டால் வணங்கும் அயோத்தியை மக்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?" என்று சிந்தித்தான் பரதன். சில நாழிகைகளில் பரதனும், சத்ருக்கனனும் அரண்மனையை அடைந்தார்கள். அரண்மனையை அடைந்த பரதன் முதலில் ஆவலுடன் தனது தந்தை தசரதரைத் காணச் சென்றான். முதலில் தந்தையின் வழக்கமான இருப்பிடம் சென்று தேடினான் அங்கு அவரைக் காணவில்லை. அவர் இருக்கக் கூடிய எல்லா இடங்களிலும் சென்று தேடினான், ஆனால் எங்கும் தந்தையைக் காணாமல் தவித்தான். அக்கணம் அவனிடம், கைகேயியின் தாதிப் பெண் ஒருத்தி வந்து," உமத தாயார் அழைத்தார்" என்று கூறினாள்.
உடனே தாய் கைகேயியைக் காண ஆவலுடன் அந்தப்புரம் சென்றான் பரதன். பிறகு, கைகேயியை வணங்கி ஆசி பெற்றான். அச்சமயத்தில் தான் அவன் தாயை கவனித்தான், அவனது தாய் வெள்ளாடை உடுத்தி இருப்பது கண்டு அதிர்ந்தான். உடனே தாய் கைகேயியிடம் பதறி அடித்துக் கொண்டு," தாயே! இது என்ன கோலம்? என் தந்தைக்கு ....!" என்று அவன் முடிப்பதற்குள், எதற்கும் வருத்தப்படாத கல் மனம் கொண்ட கைகேயி பேசத் தொடங்கினாள், "உன் தந்தை மா மன்னர் தசரதர், தேவர்கள் கை கூப்பி வணங்க விண்ணுலகம் சென்று விட்டார்! மகனே, நீ அதற்காக வருந்தாதே" என்றாள்.
தன் தந்தை இறந்த செய்தியை தாய் சொல்லிக் கேட்ட பரதன் நினைவு தடுமாறி எழுந்தான். முகத்தில் பெரும் கவலையுடன் கண்களில் நீர் ததும்ப தாய் கைகேயியை நோக்கி,"நெருப்புச் சுவாலையைக் காதினுள் வைத்தது போல, வேதனை கொடுக்கும் சொல்லைச் சொல்லி விட்டாயே. தந்தை இறந்ததற்காக யாராவது தனயனைப் பார்த்து வருந்தாதே என்று சொல்வார்களா? இப்படிச் சொல்வதற்கு உனக்கு எப்படி மனம் வந்தது? உன் மனம் என்ன கல்லா? இல்லை இரும்பா?" என்று கேட்டான்.
பின்னர் மீண்டும் தந்தை இறந்ததை நினைத்துப் பலவாறு வருந்திப் புலம்பினான். சில சமயங்களில் பித்துப் பிடித்தவன் போலப் பேசினான், கதறி அழுதான், துடி துடித்தான், கடைசியில் ஒருவாறு தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். ஆனாலும், அவன் துயரம் பூரணமாக ஆறவில்லை. முழுதும் ஆறாத அந்தத் துயருடன், "தந்தையும் குருவும் தெய்வமுமாக இருக்கும் ஸ்ரீ ராமபிரானைச் சென்று வணங்க வேண்டும். அப்பொழுது தான் எனது துன்பம் தீரும்!" என்று சொல்லிக் கொண்டான். அந்த வார்த்தைகளைக் கைகேயி கேட்டாள்." மகனே! இராமன் தன் தம்பியுடனும் மனைவியுடனும் காட்டுக்குப் போய் விட்டான்!" என்றாள்.
தாய் சொன்ன அந்த வார்த்தைகளை பரதனால் காது கொண்டு கேட்க முடியவில்லை." அய்யோ, இன்னும் எத்தனை துன்பச் செய்திகளை நான் கேட்க வேண்டி இருக்குமோ?" என்று அலறித் துடித்தான். பின்னர் தனது தாய் கைகேயியிடத்தில் அண்ணன் கானகம் போன காரணத்தைக் கேட்டான்.
கைகேயி நடந்தவற்றை விளக்கிச் சொன்னாள் "முன்பு நான் பெற்ற இரண்டு வரங்களை இப்பொழுது நிறைவேற்றிக் கொண்டேன். ஒரு வரத்தால் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்கு அனுப்பி, அவனை காட்டை ஆளும் படி செய்து விட்டேன். இன்னொரு வரம் கொண்டு என் செல்ல மகன் உனக்கு அரசாலும் உரிமையைப் பெற்றேன். இவ்வாறு, இராமன் தன் தம்பி லக்ஷ்மணன் பின்தொடர மனைவி சீதையுடன் கானகம் சென்று விட்டான். அத்துயரத்தில் உன் தந்தையும் இறந்தார். இனி ராஜ்ஜியம் உனக்கே உரியது மகனே!" என்று கூறி முடித்தாள்.
கைகேயி சொல்லிய கடுஞ்ச சொல்லைக் கேட்கப் பிடிக்காமல், பரதன் தன் கை கொண்டு காதுகளை மூடிக் கொண்டான். அப்போது தான் பரதனுக்குத், தான் வரும் வழியெல்லாம் அயோத்தியின் மக்கள் தன்னை ஏன் புறக்கணித்தார்கள் என்ற காரணம் தெரிந்தது. பெரும் சினம் கொண்டான் பரதன். கண்கள் நெருப்பை கக்கின. கன்னங்கள் துடித்தன. அவன் கோபம் கண்டு காலனும் தன் கண்களை மூடிக் கொண்டான். ஒரு கணம் அவனுக்குத் தன் தாய் கைகேயியை கொன்று விடலாமா? என்று கூட தோன்றியது. அப்போதும் தனது அண்ணனை நினைத்துக் கொண்டு, அண்ணன் ராமனுக்குத் தெரிந்தால் அவர் வருத்தப்படுவாரே, என்று தாயைக் கொல்லும் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான் பரதன். ஆனால், அவனால் தன் கோபத்தின் காரணத்தால் வெளிப்பட்ட வார்த்தைகளை அடக்க முடியவில்லை.
பரதன் தனது தாய் கைகேயியை நோக்கி, "உன்னுடைய கொடிய சூழ்ச்சியால் எனது ஆருயிர் தந்தை இறந்தார். என் தமையன் பெரும் தவத்தை மேற் கொள்ள காடு சென்றார். இப்படி தந்தை இறக்கவும், தமையன் காடு செல்லவும் வரம் கேட்ட உனது நாவை அறுப்பதும் தவறில்லை. நான், இனி என் செய்ய, நான் அரசாள வேண்டும் என்று பேராசை கொண்டதால் தான் அண்ணனை காட்டுக்கு அனுப்பியதாக உலகத்தவர்கள் அனைவரும் நினைக்க, இப்படி ஒரு பழிச் சொல்லுக்கு என்னை ஆளாக்கி விட்டாயே. பிற்காலத்து வரை நிலைத்து நிற்கும் வசைச் சொல்லை நான் ஏற்கும் படி செய்து விட்டாயே. இன்னும் எத்தனைப் பழி பாவங்களைச் செய்ய காத்து இருக்கிறாய்?. இன்னும் நீ என்ன பாவத்தை என் தலையில் சுமத்தப் போகிறாய்? நோய் சிறிது காலம் தொந்தரவு செய்து கொள்ளும். அதனால் உடலும் அழியும். ஆனால் தீடீர் என்று அறைந்து உயிரைப் பறித்துத், தானும் அழியாமல் நிற்பதற்குப் பெயர் பேய்! அந்தப் பேய் தான் நீ! தாயாகி பால் தந்து என்னை வளர்த்தாய். இன்று பழி பாவத்தால் என்னை வளர்க்க நினைக்கிறாய்.
யார் எப்படிப் போனால் என்ன? நமக்கு நல் வாழ்வு கிடைத்தால் போதும் என்று நினைத்தாயோ? நம்மிடம் உலகத்தவர்க்கு அன்பு இருந்தால் அல்லவா நமக்கு நல் வாழ்வு வந்து சேரும். இராமர் காடு சென்றதால், பசுவைப் பிரிந்த கன்று போல் மக்கள் தவிக்கிறார்கள். அவர்களின் தவிப்பைக் கண் கொண்டு பார்த்த பிறகும் உனது மனம் உருகவில்லையா? நீ செய்த தவறை உனக்கு உணர்த்தவில்லையா? இல்லை நல் மனம் என்ற ஒன்றே உன்னிடத்தில் இல்லையா?
நீ கேட்ட வரத்தால் முதலில் அண்ணன் இராமன் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?" பரதன் நாட்டை ஆளும் கொடிய எண்ணம் கொண்டான் " என்று அண்ணன் என்னைப் பற்றி தவறாக நினைக்க நீ கேட்ட இந்த ஒரு வரம் போதுமே. மாண்டு போன எனது தந்தை என்னைப் பற்றி எவ்வளவு தவறாக நினைத்து இருப்பார்? தாய் கோசலையின் முகத்தில் நான் இனி எப்படி முழிப்பேன்?
இராமர் காட்டுக்குச் சென்றதை அறிந்த பின்பும் நான் உயிருடன் இருப்பதே அதிகம். அதைவிட அவர் காட்டிலே காய் கனிகளை உண்டு பசியாற, நான் இங்கு சாலியரிசிச் சோற்றை புத்துருக்கு நெய்யோடு பொற் தட்டில் இன்னமுதென உண்டு கொண்டு இருந்தால்...
ஐயோ, அது கண்டு இந்த உலகத்தவர் என்னை இழிவாக நினைக்க மாட்டார்களா? நான் எனது தமையனுக்காக கண்ணீர் வடித்தாலும், நாம் இருவரும் இறக்காமல் இருப்பது கண்டு மக்கள் தூற்றுவார்களே. அந்த வசைக்கு ஆளாகிவிட்டனே. இறந்ததால் தந்தையின் நல்ல உள்ளம் வெளியாயிற்று. ஆனால் நான், குற்றமற்றவன் என்பதை இந்த உலகத்துக்கு எப்படிப் புரிய வைப்பேன்?.இனி நான் உன்னை தாய் என்று கூப்பிடப் போவதில்லை. மேலும், இறந்துபோக வேண்டிய நீ இன்னும் இறக்காமல் இருக்கின்றாய். இப்போதாவது உன் தவற்றை உணர்ந்து இறந்து போ! அப்படி நீ இறந்தால் அறியாமையால் நீ இதனைச் செய்தாய் என்றாகும்" என்று இவ்வாறு தாயெனப் பாராமல் கைகேயியை கடிந்து கூறினான் பரதன்.
மேலும், அவனால் அந்த இடத்தில் வெகு நேரம் நிற்க முடியவில்லை. நடந்த தவறுக்காக தாய் கோசலையிடம் சென்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவே. தாய் கோசலை இருந்த மாளிகைக்குச் சென்றான். மாதேவி கோசலையைக் கண்ட பரதன் சட்டென்று அவளது பாதங்களில் விழுந்தான். அழுது துடித்தான், தனது கண்ணீர் கொண்டு மாதா கோசலையின் பாதங்களைக் கழுவினான். பின்னர் கோசலையிடம்," தாயே தந்தை இறந்ததையும், தமையன் காட்டுக்குச் சென்றதையும் அறிந்து கொள்ளவா நான் பட்டானார் ஊரில் இருந்து வந்தேன்? அதுவும் இவை அனைத்திற்கும் காரணம் என்னைப் பெற்றவள் என்று நினைக்கும் போது அவளது வயிற்றில் பிறந்ததற்காக வருந்துகிறேன். என் வருத்தம் தீர வேண்டுமானால், நான் என் உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதுவே எனக்குச் சரியானது. கொடிய கைகேயியின் வயிற்றில் பிறந்த பாவத்துக்கு அது தான் எனக்குத் தக்க தண்டனை. என் பொருட்டு, நான் பிறந்த குலத்துக்கும் களங்கம் வரும் படி நடந்து கொண்டேனே" என்றெல்லாம் புழுதி மண் தோளில் படியும் படி தரையிலே புரண்ட வண்ணம் மனம் சோர்ந்தவனாய்ப் பரதன் கதறித் துடித்தான்.
உயர் குடிப்பிறப்பு, பொறுமை, பதிவிரதா தருமம் ஆகிய நற்குணங்களைக் கொண்ட கோசலை, அப்படிப் புலம்புகின்ற பரதனின் மனத்துயரைப் பிரதியட்சமாகக் கண்டாள். "இந்தப் பரதன் நாடாள விரும்பவில்லை. இவனுடைய மனம் களங்கமற்றது!" என்பதையும் அவள் உணர்ந்தாள். முன்பு "பரதனும் இராஜ்ஜியம் பெற உடந்தை ஆனவன்" என்று எண்ணிய ஒரு நினைவால், அவன் மீது கொண்டிருந்த கோபம் அவளுள் இப்போது இதனால் மாறியது. அக்கணத்தில் அவன் மேல் ஆழ்ந்த பாசமும் எழுந்தது. பாசத்துடன் மனத்தில் சோர்வும் ஏற்பட்டது. அத்துடன் அவள்," மகனே! உன் தாய் செய்ய இருந்த கொடிய செயல் உனக்கு முன்பே தெரியாது போலும்!" என்றாள். கோசலையின் கால்களில் விழுந்து கிடந்த பரதன், அவள் சொன்ன சொல்லைக் கேட்டவுடனே பொறி கொண்டு பிடிக்கப்பட்ட சிங்கம் போலக் குமறிக் குமறி அழுதான்.
பின்பு தாய் கோசலையிடம்," அறம் தவறி பகைவன் முன் அரசனைத் தனியாகத் தவிக்க விட்டு ஓடிவந்தவனும், அந்தணர்களுக்குத் தீங்கு செய்தவனும், பிச்சைக்காரரின் பொருளை அபகரித்தவனும், திருமாலைப் பரம் பொருள் இல்லை என்று சொல்பவனும், வேதத்தை மாற்றித் தானாக ஒன்றைப் புனைந்தவனும், தாயின் பசி தீர்க்காதவனும், தான் மட்டும் தனியே உண்டு கொழுப்பவனும் முடிவில் நரகத்திற்குச் செல்வார்கள். அது போல, இராமர் காடு செல்ல நான் உடந்தையாய் இருந்திருந்தால், அந்த நரகத்துக்கு நானும் செல்வேன்!" என்று இப்படிப் பலவாறு சபதமிட்டுப் புலம்பினான் பரதன்.
பரதனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு முற்றும் மனம் தெளிந்தால் கோசலை. அந்தக் கணத்தில் அன்போடு அவனை நோக்கினாள். தன் மகன் இராமனே வந்து விட்டதாக எண்ணி மகிழ்ந்தாள். அவள் அழுதால். கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அவனை ஆரத் தழுவிக் கொண்டாள். அச்சமயத்தில் வஷிஸ்டர் பெருமானும், சத்ருக்கனனும் அவ்விடம் வந்தனர். கோசலையின் நிலை கண்டு வருந்தினான் சத்ருக்கனன். பரதன் வசிஷ்டரைக் கண்டு பாதம் பணிந்தான். பின்னர் அவரிடம்," முனிவர் பெருமானே எனது தந்தையின் உடல் எங்கே உள்ளது?" என்று வினவினான்.
அது கேட்ட முனிவர் துக்கம் கொண்டு பரதனை நோக்கி," குற்றமற்ற குமாரனே! உன் தந்தை இறந்து ஏழு தினங்கள் கடந்தன. புத்திரர் செய்யவேண்டிய கடமைகளை உடன் செய்வாய்!" என்றார்.
கோசலையும் பரதனுக்கு ஈமக் காரியங்கள் செய்ய அனுமதி தந்தாள்.
வசிஷ்டருடன் பரதனும் சத்ருக்கனனும் தசரதச் சக்கரவர்த்தியின் சடலம் பாதுகாத்து வைத்து இருந்த இடத்திற்குச் சென்றனர். எண்ணெய்க் கடாரத்தில் இட்டிருந்த தசரதரின் மேனியை எடுத்து வஷிஸ்டர் வெளியே மஞ்சத்தின் மேல் கிடத்தினார். பரதன் தந்தையின் உடலைக் கண்டான். கதறி அழுத அவனை வஷிஸ்டர் பெருமான் தேற்றினார். விரைவில் எல்லாக் காரியங்களும் நடக்க ஆயத்தமாயின. நான்கு வேதங்களை குற்றமற கற்ற அந்தணர்கள் தசரதரின் உடலை தங்க விமானத்தில் ஏற்றினார்கள். பின்னர் மன்னரின் உடல் தாங்கிய அந்த விமானத்தைப் பட்டத்து யானையின் மேல் ஏற்றினார்கள்.
பின்னர் தசரத சக்கரவர்த்தியின் சவ ஊர்வலம் புறப்பட்டது! பெரும் மக்கள் கூட்டமும், முனிவர் கூட்டமும், அரசர் கூட்டமும் அழுத வண்ணம் பின்தொடர்ந்து செல்ல இறுதியில் தசரதரின் உடல் சரயு நதிக் கரைக்கு வந்து சேர்ந்தது. அவ்விடத்தில் எல்லா சாஸ்திர விதிமுறைகளும் பின்பற்றப் பட்டு, தசரதரின் உடல் சிதையில் வைக்கப்பட்டது. பின்னர், பரதன் ஈமச் சடங்குகளைச் செய்ய சிதையின் அருகில் வந்தான். அச்சமயம், ஈமச் சடங்குகளை செய்ய பரதன் முற்படும் போது, தீடீரென வசிஷ்டர் பாய்ந்து சென்று பரதனைத் தடுத்தார். பரதன் புரியாது விழிக்க, "பரதா சற்றுப் பொறு, உன் தந்தை உன் தாய் செய்த தீவினையால் வருந்தி," எனக்கு பரதன் புதல்வன் இல்லை! அவன் எனக்கு ஈமக்கடனும் செய்யக் கூடாது!" என்று சொல்லி விட்டார்" என்று பரதனைத் தடுத்ததன் நோக்கத்தை வஷிஸ்டர் அவனிடம் விளக்கினார். இது கேட்ட பரதன் மிகவும் வருந்திக் கண்ணீர் மல்க புலம்பத் தொடங்கினான். அங்கு கூடி இருந்த மக்கள் அனைவரும், பரதம் புலம்பிய புலம்பலில், அவனுக்கு ஒருவேளை சித்தப் பிரமை பிடித்து விட்டதோ எனக் கூடக் கருதினர்.
ஆனால், மறுகணம் வஷிஸ்டர் நேரமாவதை மனதில் கொண்டு விரைந்து காரியத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால், சத்ருக்கனை அழைத்து ஈமக் கடன்களை முடித்தார். பிறகு எல்லோரும், மனதில் துக்கத்துடன் அரண்மனை திரும்பினர். பத்து நாட்கள் செய்ய வேண்டிய சடங்குகளைக் கூட சத்துருக்கனே செய்து முடித்தான்.
பதினான்காம் நாள் விடியற்காலையில் அரசனை நியமிப்பதற்காக, வசிஷ்ட முனிவர் தம்மை அந்தணர்கள் பின் தொடர பரதனிடம் வந்தார். அறிஞருடனே மந்திரிமார்களும் இராஜ்ஜியம் அரசனின்ரி இருப்பதைப் பற்றி பரதனிடம் ஆலோசிக்க வந்தார்கள்
பரதனிடம் தூதுவர் தம் வருகையை தெரிவித்தல்
பொரு இல் தூதுவர் போயினர், பொய் இலார்;
இரவும் நன் பகலும் கடிது ஏகினர்;
பரதன் கோயில் உற்றார், படிகாரிர்! எம்
வரவு சொல்லுதிர் மன்னவற்கே! என்றார்.
தூதர் வந்தனர், உந்தை சொல்லோடு என,
காதல் முந்திக் களிக்கின்ற சிந்தையான்,
போதுக ஈங்கு என, புக்கு, அவர் கைதொழ,
தீது இலன்கொல் திரு முடியோன் என்றான்.
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன்;
இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும்
உலைவு இல் செல்வத்தனோ? என, உண்டு என,
தலையின் ஏந்தினன், தாழ் தடக் கைகளே.
மற்றும் சுற்றத் துளார்க்கும் வரன்முறை
உற்ற தன்மை வினாவி உவந்தபின்,
இற்றது ஆகும், எழுது அரு மேனியாய்!
கொற்றவன் தன் திருமுகம் கொள்க என்றார்.
என்று கூறலும், ஏத்தி இறைஞ்சினான்,
பொன் திணிந்த பொரு இல் தடக் கையால்,
நின்று வாங்கி, உருகிய நெஞ்சினான்
துன்று நாள்மலர்ச் சென்னியில் சூடினான்.
சூடி, சந்தனம் தோய்த்துடைச் சுற்று மண்
மூடு தோட்டின் முடங்கல் நிமிர்ந்தனன்;
ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்குக்
கோடி மேலும் நிதியம் கொடுத்தனன்.
வாள் நிலா நகை தோன்ற, மயிர் புறம்
பூண, வான் உயர் காதலின் பொங்கினான்,
தாள் நிலாம் மலர் தூவினன் - தம்முனைக்
காணலாம் எனும் ஆசை கடாவவே.
எழுக சேனை என்று ஏவினன்; எய்தினன்
தொழுது, கேகயர் கோமகன் சொல்லொடும்,
தழுவு தேரிடைத் தம்பியொடு ஏறினான்;
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான்.
யானை சுற்றின; தேர் இரைத்து ஈண்டின;
மான வேந்தர் குழுவினர்; வாளுடைத்
தானை சூழ்ந்தன; சங்கம் முரன்றன;
மீன வேலையின் விம்மின, பேரியே.
கொடி நெருங்கின; தொங்கல் குழீஇயின;
வடி நெடுங் கண் மடந்தையர் ஊர் மடப்
பிடி துவன்றின; பூண் ஒளி பேர்ந்தன,
இடி துவன்றின மின் என, எங்குமே.
பண்டி எங்கும் பரந்தன; பல் இயம்
கொண்டு இயம்பின கொண்டலின்; கோதையில்
வண்டு இயம்பின; வாளியின் வாவுறும்
செண்டு இயங்கு பரியும் செறிந்தவே.
துளை முகத்தின் சுருதி விளம்பின;
உளை முகத்தின் உம்பரின் ஏகிட,
விளை முகத்தன வேலையின் மீது செல்
வளை முகத்தன வாசியும் வந்தவே.
வில்லின் வேதியர், வாள் செறி வித்தகர்,
மல்லின் வல்லர், சுரிகையின் வல்லவர்,
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர்,
தொல்லை வாரணப் பாகரும், சுற்றினார்.
எறி பகட்டினம், ஆடுகள், ஏற்றை மா,
குறி கொள் கோழி, சிவல், குறும்பூழ், நெடும்
பொறி மயிர்க் கவுதாரிகள், போற்றுறு
நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார்.
நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில்,
பறந்து போதும்கொல் என்று, பதைக்கின்றார்,
பிறந்து, தேவர், உணர்ந்து, பெயர்ந்து முன்
உறைந்து வான் உறுவார்களை ஒக்கின்றார்.
ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் எனத்
தான் அளைந்து தழுவின, தண்ணுமை;
தேன் அளைந்து செவி உற வார்த்தென,
வான் அளைந்தது, மாகதர் பாடலே.
ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை
வீறு கொண்டன, வேதியர் வாழ்த்து ஒலி;
ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை
மாறு கொண்டன, வந்திகர் வாழ்த்து அரோ!
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து
ஏறி, ஏழ் பகல் நீந்தி, பின், எந்திரத்து
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான்.
ஏர் துறந்த வயல்; இள மைந்தர் தோள்
தார் துறந்தன; தண் தலை நெல்லினும்,
நீர் துறந்தன; தாமரை நீத்தெனப்
பார் துறந்தனள், பங்கயச் செல்வியே.
பிதிர்ந்து சாறு பெருந் துறை மண்டிடச்
சிதர்ந்து சிந்தி அழிந்தன தேம் கனி;
முதிர்ந்து, கொய்யுநர் இன்மையின், மூக்கு அவிழ்ந்து
உதிர்ந்து உலர்ந்தன, ஒண் மலர் ஈட்டமே.
பள்ளிபடைப் படலம் - பரதனின் துயரம்
ஆய்ந்து, மள்ளர் அரிகுநர் இன்மையால்
பாய்ந்த சூதப் பசு நறுந் தேறலால்
சாய்ந்து, ஒசிந்து, முளைத்தன சாலியே.
புள் குலா வயல் பூசல் கடைசியர்,
கட்கிலார் களை; காதல் கொழுநரோடு
உள் கலாம் உடையாரின், உயங்கினார்.
தூது சென்றில, வந்தில, தோழர்பால்;
மோதுகின்றில பேரி, முழா; விழாப்
போதுகின்றில, பொன் அணி வீதியே.
ஆடல் நீத்த, அரங்கொடு அகன் புனல்;
சூடல் நீத்தன, சூடிகை; சூளிகை
மாடம் நீத்தன, மங்கல வள்ளையே.
புகை இழந்தன, மாளிகை; பொங்கு அழல்
சிகை இழந்தன, தீவிகை; தே மலர்த்
தொகை இழந்தன, தோகையர் ஓதியே.
மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால்,
உலர்ந்த-வன்கண் உலோபர் கடைத்தலைப்
புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே. 26
பூவின் நீத்தென, நாடு, பொலிவு ஒரீஇ,
தேவி நீத்து அருஞ் சேண் நெறி சென்றிட,
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே.
ஒன்றும் உற்றது உணர்ந்திலன், உன்னுவான்,
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா
நின்று நின்று, நெடிது உயிர்த்தான் அரோ!
பூண்ட வேந்தன் திருமுகன், புந்திதான்
தூண்டு தேரினும் முந்துறத் தூண்டுவான்,
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான்.
உண்டு போதி என்று, ஒண் கதிர்ச் செல்வனை,
விண் தொடர்ந்து விலக்குவ போல்வன,
கண்டிலன், கொடியின் நெடுங் கானமே.
வேட்ட, வேட்டவர் கொண்மின், விரைந்து எனக்
கோட்டி மாக்களைக் கூவுவ போல்வன,
கேட்டிலன், முரசின் கிளர் ஓதையே.
பிள்ளை மாக் களிறும், பிடி ஈட்டமும்,
வள்ளைமாக்கள், நிதியும், வயிரியர்,
கொள்ளை மாக்களின் கொண்டனர் ஏகவே.
ஆவும், மாவும், அழி கவுள் வேழமும்,
மேவு காதல் நிதியின் வெறுக்கையும்,
பூவின் வானவர் கொண்டனர் போகவே.
ஏழ் அமைந்த இசை இசையாமையால்,
மாழை உண் கண் மயில் எனும் சாயலார்
கூழை போன்ற, பொருநர் குழாங்களே.
ஊரும் பண்டியும், ஊருநர் இன்மையால்,
யாரும் இன்றி, எழில் இல; வீதிகள்,
வாரி இன்றிய வாலுக ஆற்றினே.
பின்னை, அப் பெரியோர் தம் பெருந்தகை,
மன்னன் வைகும் வளநகர் போலும் ஈது?
என்ன தன்மை? இளையவனே! என்றான்.
சூல் தடங் கருங்கார் புரை தோற்றத்தான்
சேல் தடங் கண் திருவொடும் நீங்கிய
பால் தடங் கடல் ஒத்தது, பார் என்றான்.
இரு கை கூப்பி இறைஞ்சினன், எய்தியது
ஒரு வகைத்து அன்று உறு துயர்; ஊழி வாழ்
திரு நகர்த் திரு தீர்ந்தனன் ஆம் என்றான்.
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள்
நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான்
தனையனும், தந்தை சார்விடம் மேவியான்.
இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன்;
அருப்பம் அன்று இது என்று, ஐயுறவு எய்தினான்-
பொருப்பு நாண உயர்ந்த புயத்தினான்.
கைகேயி பரதனை அழைத்தல்
தூய கையின் தொழல் உறுவான் தனை,
கூயள் அன்னை; குறுகுதிர் ஈண்டு என,
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள்.
சிந்தை ஆரத் தழுவினள், தீது இலர்
எந்தை, என்னையர், எங்கையர்? என்றனள்;
அந்தம் இல் குணத்தானும், அது ஆம் என்றான்.
வேண்டினென், எய்தினென், உள்ளம் விம்முமால்;
ஆண் தகை நெடு முடி அரசர் கோமகன்
யாண்டையான்? பணித்திர் என்று, இரு கை கூப்பினான்.
தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத்
தேன் அமர் தெரியலான், தேவர் கைதொழ,
வானகம் எய்தினான்; வருந்தல் நீ என்றாள்.
நெறிந்து அலர் குஞ்சியான், நெடிது வீழ்ந்தனன்;
அறிந்திலன்; உயிர்த்திலன்;-அசனி ஏற்றினால்
மறிந்து உயர் மராமரம் மண் உற்றென்னவே.
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர,
தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல்,
நீ அலது உரைசெய நினைப்பார்களோ? என்றான்.
விழுந்தனன்; விம்மினன்; வெய்து உயிர்த்தனன்;
அழிந்தனன்; அரற்றினன்; அரற்றி, இன்னன
மொழிந்தனன், பின்னரும்-முருகன் செவ்வியான்.
சிறந்த நின் தண்ணளித் திருவைத் தேசு அழித்து,
இறந்தனை ஆம் எனின், இறைவ! நீதியை
மறந்தனை; உனக்கு, இதின் மாசு மேல் உண்டோ?
இனக் குறும்பு யாவையும் எற்றி, யாவர்க்கும்
மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய்! மறந்து,
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்பாலதோ?
கதையையும் புதுக்கிய தலைவன்! கண்ணுடை
நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய
புதல்வனை, எங்ஙனம் பிரிந்து போயினாய்?
எவ் வழி மருங்கினும் இரவலாளர் தாம்,
இவ் வழி உலகின் இல்; இன்மை நண்பினோர்
அவ் வழி உலகினும் உளர்கொலோ?-ஐயா!
நிற்பன பல் உயிர் உணங்க, நீ நெடுங்
கற்பக நறு நிழல் காதலித்தியோ?-
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே!
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ?
சம்பரன் அனைய அத் தானைத் தானவர்,
அம்பரத்து இன்னமும் உளர்கொலாம்?-ஐயா!
உயங்கல் இல் மறையவர்க்கு உதவி, உம்பரின்,
அயம் கெழு வேள்வியோடு, அமரர்க்கு ஆக்கிய,
வயங்கு எரி வளர்க்கலை, வைக வல்லையோ?
வாழிய கரியவன், வறியன் கை என,
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா
ஆழியை, இனி, அவற்கு அளிக்க எண்ணியோ?
முற்று உலகு அளித்து, அது முறையின் எய்திய
கொற்றவன் முடி மணக் கோலம் காணவும்
பெற்றிலை போலும், நின் பெரிய கண்களால்?
ஊற்று உறு கண்ணினன், உருகுவான்; தனைத்
தேற்றினன் ஒரு வகை; சிறிது தேறிய,
கூற்று உறழ் வரி சிலைக் குரிசில் கூறுவான்.
அந்தம் இல் பெருங் குணத்து இராமன்; ஆதலால்,
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால்,
சிந்தை வெங் கொடுந் துயர் தீர்கலாது என்றான்.
வெவ் உரை வல்லவள், மீட்டும் கூறுவாள்;
தெவ் அடு சிலையினாய்! தேவி, தம்பி, என்று
இவ் இருவோரொடும் கானத்தான் என்றான்.
நினைத்தனன்; இருந்தனன், நெருப்புண்டான் என;
வினைத் திறம் யாது இனி விளைப்பது? இன்னமும்
எனைத்து உள கேட்பன துன்பம், யான்? என்றான்.
ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல், அப்
பூங் கழல் காலவன் வனத்துப் போயது,
தீங்கு இழைத்த - அதனினோ? தெய்வம் சீறியோ?
ஓங்கிய விதியினோ? யாதினோ? எனா.
தீயன இராமனே செய்யுமேல், அவை
தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்?
போயது தாதை விண் புக்க பின்னரோ?
ஆயதன் முன்னரோ? அருளுவீர் என்றான்.
குருக்களை இகழ்தலின் அன்று; கூறிய
செருக்கினால் அன்று; ஒரு தெய்வத்தாலும் அன்று;
அருக்கனே அனைய அவ் அரசர் கோமகன்
இருக்கவே, வனத்து அவன் ஏகினான் என்றாள்.
குற்றம் ஒன்று இல்லையேல், கொதித்து வேறு உளோர்
செற்றதும் இல்லையேல், தெய்வத்தால் அன்றேல்,
பெற்றவன் இருக்கவே, பிள்ளை கான் புக
உற்றது என்? தெரிதர உரைசெய்வீர்? என்றான்.
வாக்கினால் வரம் தரக் கொண்டு, மைந்தனைப்
போக்கினேன், வனத்திடை; போக்கி, பார் உனக்கு
ஆக்கினேன்; அவன் அது பொறுக்கலாமையால்,
நீக்கினான் தன் உயிர், நேமி வேந்து என்றான்.
சூடின மலர்க் கரம், சொல்லின் முன், செவி
கூடின; புருவங்கள் குனித்துக் கூத்து நின்று
ஆடின; உயிர்ப்பினோடு, அழல் கொழுந்துகள்
ஓடின; உமிழ்ந்தன, உதிரம் கண்களே!
துடித்தன கபோலங்கள்; சுற்றும் தீச் சுடர்
பொடித்தன மயிர்த் தொளை; புகையும் போர்த்தது;
மடித்தது வாய்; நெடு மழைக் கை, மண் பக
அடித்தன, ஒன்றொடு ஒன்று அசனி அஞ்சவே.
பாதங்கள் பெயர்தொறும், பாரும் மேருவும்,
போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு,
மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர,
ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே.
அஞ்சினர் வானவர்; அவுணர் அச்சத்தால்
துஞ்சினர் எனைப் பலர்; சொரி மதத் தொளை
எஞ்சின, திசைக் கரி; இரவி மீண்டனன்;
வெஞ் சினக் கூற்றும், தன் விழி புதைத்தே!
கொடிய வெங் கோபத்தால் கொதித்த கோளரி,
கடியவள் தாய் எனக் கருதுகின்றிலன்;
நெடியவன் முனியும் என்று அஞ்சி நின்றனன்;
இடி உரும் அனைய வெம் மொழி இயம்புவான்:
மாண்டனன் எந்தை, என் தம்முன் மா தவம்
பூண்டனன், நின் கொடும் புணர்ப்பினால்; என்றால்,
கீண்டிலென் வாய்; அது கேட்டும், நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்?
நீ இனம் இருந்தனை; யானும், நின்றனென்;
"ஏ" எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்;
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்,
"தாய்" எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?
மாளவும் உளன், ஒரு மன்னன் வன் சொலால்;
மீளவும் உளன் ஒரு வீரன்; மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன்; ஆயினால்,
கோள் இல அறநெறி! குறை உண்டாகுமோ?
"சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால்,
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து, ஒரு
பழி உடைத்து ஆக்கினன், பரதன் பண்டு" எனும்,
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ?
கவ்வு அரவு இது என இருந்திர்; கற்பு எனும்
அவ் வரம்பு அழித்து, உமை அகத்துளே வைத்த
வெவ் அரம் பொருத வேல் அரசை வேர் அறுத்து,
இவ் வரம் கொண்ட நீர் இனி என் கோடிரோ?
நோயீர் அல்லீர்; நும் கணவன் தன் உயிர் உண்டீர்;
பேயீரே நீர்! இன்னம் இருக்கப் பெறுவீரே?
மாயீர்! மாயா வன் பழி தந்தீர்! முலை தந்தீர்!
தாயீரே நீர்! இன்னும் எனக்கு என் தருவீரே!
ஒன்றும் பொய்யா மன்னனை வாயால், உயிரோடும்
தின்றும், தீரா வன் பழி கொண்டீர்; திரு எய்தி
என்றும் நீரே வாழ உவந்தீர்; அவன் ஏக,
கன்றும் தாயும் போல்வன கண்டும் கழியீரே!
இறந்தான் தந்தை, "ஈந்த வரத்துக்கு இழிவு" என்னா;
"அறந்தான் ஈது" என்று, அன்னவன் மைந்தன், அரசு எல்லாம்
துறந்தான்; "தாயின் சூழ்ச்சியின், ஞாலம், அவனோடும்
பிறந்தான், ஆண்டான்" என்னும் இது, என்னால் பெறலாமே?
"மாளும்" என்றே தந்தையை உன்னான்; வசை கொண்டாள்
கோளும் என்னாலே எனல் கொண்டான்; அது அன்றேல்.
மீளும் அன்றே? என்னையும், "மெய்யே உலகு எல்லாம்
ஆளும்" என்றே போயினன் அன்றோ?- அரசு ஆள்வான்.
ஓதா நின்ற தொல் குல மன்னன் உணர்வு அப்பால்
யாதானும் தான் ஆக; "எனக்கே பணி செய்வான்,
தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன்" என்னப்
போதாதோ, என் தாய் இவள் கொண்ட பொருள் அம்மா?
இராமாயணம் - பரதனின் துயர உரைகள்
கை ஆர் கல்லைப் புல் அடகு உண்ண, கலம் ஏந்தி,
வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு, அமுது என்ன,
நெய்யோடு உண்ண நின்றது, நின்றார் நினையாரோ?
நல்லான் அன்றே துஞ்சினன்; நஞ்சே அனையாளைக்
கொல்லேன், மாயேன்; வன் பழியாலே குறைவு அற்றேன்-
அல்லேனோ யான்! அன்பு உடையார்போல் அழுகின்றேன்.
தீராது ஒன்றால் நின் பழி; ஊரில் திரு நில்லாள்;
ஆரோடு எண்ணிற்று? ஆர் உரைதந்தார்? அறம் எல்லாம்
வேரோடும் கேடு ஆக முடித்து, என் விளைவித்தாய்?
ஒன்றோ? கானத்து அண்ணலே உய்த்தேன்; உலகு ஆள்வான்
நின்றேன்; என்றால், நின் பிழை உண்டோ ? பழி உண்டோ ?
என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ ?
மண்ணோர் பாராது எள்ளுவர்; வாளா பழி பூண்டாய்;
"உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு" என்று
எண்ணா நின்றேன்; அன்றி இரேன், என் உயிரோடே.
பரதனின் சூளுரை
தோன்றும் தீராப் பாதகம் அற்று, என் துயர் தீர,
சான்றும்தானே நல் அறம் ஆக, தகை ஞாலம்
மூன்றும் காண, மா தவம் யானே முயல்கின்றேன்.
மறந்தாய் செய்தாய் ஆகுதி; மாயா உயிர் தன்னைத்
துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி; உலகத்தே
பிறந்தாய் ஆதி; ஈது அலது இல்லைப் பிறிது என்றான்.
கோசலையைச் சந்தித்தல்
பன்ன அருங் கொடு மனப் பாவிபாடு இரேன்;
துன்ன அருந் துயர் கெட, தூய கோசலை
பொன் அடி தொழுவென் என்று, எழுந்து போயினான்.
மீண்டும், மண் கிழிதர வீழ்ந்து, கேழ் கிளர்
காண் தகு தடக் கையின் கமலச் சீறடி
பூண்டனன்; கிடந்தனன்; புலம்பினான் அரோ!
பரதனின் இரங்கல்
வந்தது, தமியென், இம் மறுக்கம் காணவோ?
சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும்,
அந்தரத்து அமரரும் அழுது சோரவே.
அடித்தலம் கண்டிலென் யான், என் ஐயனை;
படித்தலம் காவலன், பெயரற்பாலனோ?
பிடித்திலிர் போலும் நீர்; பிழைத்திரால் எனும்-
பொடித்தலம் தோள் உறப்புரண்டு சோர்கின்றான்.
கொடியவர் யாவரும் குலங்கள் வேர் அற
நொடிகுவென் யான்; அது நுவல்வது எங்ஙனம்?
கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன்,
முடிகுவென், அருந் துயர் முடிய என்னுமால்,
இரதம் ஒன்று ஊர்ந்து, பார் இருளை நீக்கும் அவ்
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம்,
"பரதன்" என்று ஒரு பழி படைத்தது என்னுமால்-
மரகத மலை என வளர்ந்த தோளினான்.
வாள்தொடு தானையான் வானில் வைகிட,
காடு ஒரு தலைமகன் எய்த, கண் இலா
நாடு ஒரு துயரிடை நைவதே எனும்-
தாள் தொடு தடக் கை அத் தருமமே அனான்.
கோசலையின் உரை
குலம் பொறை கற்பு இவை சுமந்த கோசலை;
நிலம் பொறை ஆற்றலன், நெஞ்சம் தூய்து எனா,
சலம் பிறிது உற, மனம் தளர்ந்து, கூறுவாள்:
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்;
செய்யனே என்பது தேறும் சிந்தையாள்,
கைகயர் கோமகள் இழைத்த கைதவம்,
ஐய! நீ அறிந்திலை போலுமால்? என்றாள்.
பரதனின் சூளுரை
கோள் உறு மடங்கலின் குமுறி விம்முவான்,
நாள் உறு நல் அறம் நடுங்க, நாவினால்
சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான்:
அறம் கெட முயன்றவன், அருள் இல் நெஞ்சினன்,
பிறன்கடை நின்றவன், பிறரைச் சீறினோன்,
மறம்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மா தவர்க்கு அருந் துயரம் சூழ்ந்துளோன்.
குரவரை, மகளிரை, வாளின் கொன்றுளோன்,
புரவலன் தன்னொடும் அமரில் புக்கு உடன்
விரவலர் வெரிநிடை விழிக்க, மீண்டுளோன்,
இரவலர் அரு நிதி எறிந்து வௌவினோன்,
"தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன்" என்று
அழைத்தவன், அறநெறி அந்தணாளரில்
பிழைத்தவன், பிழைப்பு இலா மறையைப் பேணலாது,
"இழைத்த வன் பொய்" எனும் இழுதை நெஞ்சினோன்.
தாய் பசி உழந்து உயிர் தளரத், தான் தனி,
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்,
நாயகன் பட நடந்தவனும், நண்ணும் அத்
தீ எரி நரகத்துக் கடிது செல்க, யான்.
தாளினில் அடைந்தவர்தம்மை, தற்கு ஒரு
கோள் உற, அஞ்சினன் கொடுத்த பேதையும்,
நாளினும் அறம் மறந்தவனும், நண்ணுறும்
மீள அரு நரகிடைக் கடிது வீழ்க, யான்.
பொய்க் கரி கூறினோன், போருக்கு அஞ்சினோன்,
கைக் கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன்,
எய்த்த இடத்து இடர் செய்தோன், என்று இன்னோர் புகும்
மெய்க்கொடு நரகிடை விரைவின் வீழ்க, யான்.
அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன்,
மைந்தரைக் கொன்றுளோன், வழக்கில் பொய்த்துளோன்,
நிந்தனை தேவரை நிகழ்த்தினோன், புகும்
வெந் துயர் நரகத்து வீழ்க, யானுமே.
கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்,
மன்றிடைப் பிறர் பொருள் மறைத்து வவ்வினோன்,
நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன்,
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே.
ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை
ஊறு கொண்டு அலைக்க, தன் உயிர் கொண்டு ஓடினோன்,
சோறு தன் அயலுளோர் பசிக்கத் துய்த்துளோன்,
ஏறும் அக் கதியிடை யானும் ஏறவே.
எஃகு எறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு
ஒஃகினன், உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான்,
அஃகல் இல் அறநெறி ஆக்கியோன் பொருள்
வெஃகிய மன்னன், வீழ் நரகின் வீழ்க, யான்.
அழிவு அரும் அரசியல் எய்தி, ஆகும் என்று,
இழி வரு சிறு தொழில் இயற்றி, ஆண்டு, தன்
வழி வரு தருமத்தை மறந்து, மற்று ஒரு
பழி வரு நெறி படர் பதகன் ஆக, யான்.
தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர்
எஞ்சல் இல் மறுக்கினோடு இரியல் போயுற,
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீக் கொள
அஞ்சின மன்னவன் ஆக யானுமே.
கன்னியை அழி செயக் கருதினோன், குரு
பன்னியை நோக்கினோன், பருகினோன் நறை,
பொன் இகழ் களவினில் பொருந்தினோன் எனும்
இன்னவர் உறு கதி என்னது ஆகவே.
பரதனின் சூளுரை தொடர்ச்சி
"ஆண் அலன், பெண் அலன், ஆர்கொலாம்?" என
நாணலன், நரகம் உண்டு என்னும் நல் உரை
பேணலன், பிறர் பழி பிதற்றி, ஆக யான்,
மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன்,
சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன்,
நறியன அயலவர் நாவில் நீர் வர
உறு பதம் நுங்கிய ஒருவன், ஆக யான்.
வில்லினும் வாளினும் விரிந்த ஆண் தொழில்
புல்லிடை உகுத்தனென், பொய்ம்மை யாக்கையைச்
சில் பகல் ஓம்புவான் செறுநர் சீறிய
இல்லிடை இடு பதம் ஏற்க, என் கையால்.
ஏற்றவற்கு, ஒரு பொருள் உள்ளது, இன்று என்று
மாற்றலன், உதவலன், வரம்பு இல் பல் பகல்
ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அக்
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க, யான்.
பிணிக்கு உறு முடை உடல் பேணி, பேணலார்த்
துணிக் குறு வயிர வாள் தடக் கை தூக்கிப் போய்,
மணிக் குறு நகை இள மங்கைமார்கள் முன்,
தணிக்குறு பகைஞரைத் தாழ்க, என் தலை.
கரும்பு அலர் செந் நெல் அம் கழனிக் கான நாடு
அரும் பகை கவர்ந்து உண, ஆவி பேணினென்,
இரும்பு அலர் நெடுந் தளை ஈர்த்த காலொடும்,
விரும்பலர் முகத்து, எதிர் விழித்து நிற்க, யான்.
கோசலையுடனான காட்சி
தீய கானகம் திருவின் நீங்கி முன்
போயினான் வரக் கண்ட பொம்மலாள்
ஆய காதலால், அழுது புல்லினாள்.
செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும்,
அம்மை தீமையும், அறிதல் தேற்றினாள்;
கொம்மை வெம் முலை குமுறு பால் உக,
விம்மி விம்மி நின்று, இவை விளம்புவாள்:
முன்னை நும் குல முதலுளோர்கள்தாம்,
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?
மன்னர் மன்னவா! என்று, வாழ்த்தினாள்-
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள்.
இறுதிக் கடன்கள்
அன்னை தாளில் வீழ்ந்து, இளைய அண்ணலும்,
சொன்ன நீர்மையால் தொழுது மாழ்கினான்;
இன்ன வேலைவாய், முனிவன் எய்தினான்.
வந்த மாதவன் தாளில், வள்ளல் வீழ்ந்து,
எந்தை யாண்டையான்? இயம்புவீர்? எனா,
நொந்து மாழ்கினான்; நுவல்வது ஓர்கிலா
அந்த மா தவன் அழுது புல்லினான்.
மறு இல் மைந்தனே! வள்ளல், உந்தையார்,
இறுதி எய்தி நாள் ஏழ்-இரண்டின;
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று,
உறுவல் மேயினாள் உரையின் மேயினாள்.
அன்னை ஏவினாள், அடி இறைஞ்சினான்;
பொன்னின் வார் சடைப் புனிதனோடும் போய்,
தன்னை நல்கி, அத் தருமம் நல்கினான்
பன்னு தொல் அறப் படிவம் நோக்கினான்.
அண்ணல், ஆழியான், அவனி காவலான்,
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை,
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான்.
பற்றி, அவ்வயின் பரிவின் வாங்கினார்,
சுற்றும் நான்மறைத் துறை செய் கேள்வியார்;
கொற்ற மண்கணை குமுற, மன்னனை,
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினர்.
கரை செய் வேலைபோல், நகரி, கை எடுத்து,
உரை செய் பூசலிட்டு, உயிர் துளங்குற,
அரச வேலை சூழ்ந்து, அழுது, கைதொழ,
புரசை யானையில் கொண்டு போயினார்.
எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ,
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் எனப்
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே.
மாவும், யானையும், வயங்கு தேர்களும்,
கோவும், நான் மறைக் குழுவும், முன் செல,
தேவிமாரொடும் கொண்டு, தெண் திரை
தாவு வார் புனல் சரயு எய்தினார்.
இறுதிச் சடங்குகள்
செய்து, தீக் கலம் திருத்தி, செல்வனை,
வெய்தின் ஏற்றினார்; வீர! நுந்தைபால்
பொய் இல் மாக் கடன் கழித்தி போந்து என்றார்.
என்னும் வேலையில் எழுந்த வீரனை,
அன்னை தீமையால் அரசன் நின்னையும்,
துன்னு துன்பத்தால், துறந்து போயினான்,
முன்னரே என முனிவன் கூறினான்.
துறந்து போயினான் நுந்தை; தோன்றல்! நீ
பிறந்து, பேர் அறம் பிழைத்தது என்றபோது,
இறந்து போயினான்; இருந்தது, ஆண்டு, அது
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம் கொலாம்.
இடிக்கண் வாள் அரா இடைவது ஆம் எனா,
படிக்கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான்,
தடுக்கல் ஆகலாத் துயரம் தன்னுளே
துடிக்க, விம்மி நின்று அழுது சொல்லுவான்:
உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே?
இரவிதன் குலத்து, எந்தை முந்தையோர்
பிரத பூசனைக்கு உரிய பேறு இலேன்;
அரசு செய்யவோ ஆவது ஆயினேன்!
பூவில் நான்முகன் புதல்வன் ஆதி ஆம்
தா இல் மன்னர், தம் தரும நீதியால்
தேவர் ஆயினார்; சிறுவன் ஆகியே,
ஆவ! நான் பிறந்து அவத்தன் ஆனவா?
துன்னு தாள் வளம் சுமந்த தாழையில்
பன்னு வான் குலைப் பதடி ஆயினேன்;
என்னை! என்னையே ஈன்று காத்த என்
அன்னையார் எனக்கு அழகு செய்தவா!
என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அத்
துன்று தாரவற்கு இளைய தோன்றலால்,
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான்-
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான்.
குழையும் மா மலர்க் கொம்பு அனார்கள் தாம்
தழை இல் முண்டகம் தழுவி கானிடை
முழையில் மஞ்ஞைபோல், எரியில் மூழ்கினார்.
அங்கி நீரினும் குளிர, அம்புயத்
திங்கள் வாள் முகம் திரு விளங்குற,
சங்கை தீர்ந்து, தம் கணவர் பின் செலும்
நங்கைமார் புகும் உலகம் நண்ணினார்.
சடங்குகளின் முடிவு
இனைய தன்மையால் இயைவ செய்த பின்,
மனையின் எய்தினான் - மரபின் வாழ்வினை
வினையின் எய்தும் ஓர் பிணியின் வேலையான்.
ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என,
மைந்தன், வெந் துயர்க் கடலின் வைகினான்;
தந்தை தன்வயின் தருமம் யாவையும்,
முந்து நூலுளோர் முறையின் முற்றினான்.
முற்றும் முற்றுவித்து உதவி, மும்மை நூல்
சுற்றம் யாவையும் தொடரத் தோன்றினான்,
வெற்றி மா தவன் - வினை முடித்த அக்
கொற்ற வேல் நெடுங் குமரற் கூறுவான்:
மன்னர் இன்றியே வையம் வைகல்தான்
தொன்மை அன்று எனத் துணியும் நெஞ்சினார்,
அன்ன மா நிலத்து அறிஞர் தம்மொடும்,
முன்னை மந்திரக் கிழவர் முந்தினார்.