நகர் நீங்கு படலம் - 1869
அரசன் தேவியர் துயரம்
1869.
அறுபதினாயிரர் அரசன் தேவியர்,
மறு அறு கற்பினர், மழைக் கண்ணீரினர்,
சிறுவனைத் தொடர்ந்தனர்; திறந்த வாயினர்;
எறி திரைக் கடல் என இரங்கி ஏங்கினார்.
மறு அறு கற்பினர் - குற்றமற்ற கற்பினை உடைய; அறுபதினாயிரர்
அரசன்தேவியர் - அறுபதினாயிரம் பேராகிய தசரதனுடைய மனைவியர்;
மழைக் கண் நீரினர் - மழை போன்ற கண்ணீரை உடையவராய்;
சிறுவனைத் தொடர்ந்தனர் - இராமனைப் பின்தொடர்ந்து; திறந்த
வாயினர் - வாய் திறந்து; எறி திரைக்கடல் என இரங்கிஏங்கினார் -
அலை வீசும் கடல் போல அழுது வருந்தினார்கள்.
இவர் உரிமை மகளிர் ஆவர். பரசுராமனிடம் இருந்து தன்னைக்
காத்துக் கொள்ள ஒவ்வொருஆண்டும் மணக் கோலத்துடன் இருக்க
வேண்டிய; தயரதன் அறுபதினாயிரம் மகளிரை அறுபதினாயிரம்
ஆண்டுகளில் மணந்தான் என்று ஒரு கதை உண்டு. இதுவே வான்மீகத்தில்
முந்நூற்றைம்பதின்மர் எனப்பேசப்பெற்றுள்ளது. மூவரே பட்டத்தரசியர்
ஆவர். 174
