நகர் நீங்கு படலம் - 1734
தயரதன் வசிட்டனை வேண்டுதல்
1734.
என்ற அம் முனிவன் தன்னை,
‘நினையா வினையேன், இனி, யான்
பொன்றும் அளவில் அவனைப்
புனை மா மகுடம் புனைவித்து,
ஒன்றும் வனம் என்று உன்னா
வண்ணம் செய்து, என்உரையும்,
குன்றும் பழி பூணாமல்,
காவாய்; கோவே!’ என்றான்.
என்ற அம்முனிவன் தன்னை - என்று ஆறுதல் கூறிய அவ்வசிட்ட
முனிவனை நோக்கி(தயரதன்); ‘கோவே! - ஆசார்யத் தலைவனே!;
நினையா வினையேன் யான் இனிப்பொன்றும் அளவில் - நினைக்க
இயலாத கொடிய வினையுடைய யாம் மேல் இறந்துபடுவதற்குமுன்னால்;
அவனைப் புனைமா மகுடம் புனைவித்து - அந்த இராமனை
அணிதற்குரிய முடியைச் சூடும்படி செய்து; ஒன்றும் வனம் என்று -
காட்டுக்குப் போவோம் என்று; (அவன் தன்மனத்தில்) உன்னா
வண்ணம் செய்து - நினையாதபடி செய்து; என் உரையும் - என்
வாக்கும்; குன்றும் பழி பூணாமல் - இழிவாகிய பழி மேற் கொள்ளாதபடி;
காவாய் -காப்பாற்றுவாயாக! என்றான் -
கைகேயியால் இம்மாற்றம் நிகழ வேண்டும் என்பதை ‘என் உரையும்
குன்றும் பழி பூணாமல்காவாய்’ என்ற தயரதன் வேண்டுகோளால்
அறியலாம். தன் சத்தியத்தில் சிறிதும் தவறாததயரதன் பெருங்
குணநலமும் இங்கே வெளிப்படுகிறது. 40
