கண்ணன் என் காதலன் - 4

கண்ணன் என் காதலன் - 4

bookmark

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம்
  கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
  ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே - தங்கம். 1

கன்னிகை யாயிருந்து தங்கமே - நாங்கள்
  காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் - என்னும்
  அதனையுஞ் சொல்லிட்டி தங்கமே தங்கம். 2

சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே - எங்கும்
  தோழமை யில்லையடி தங்கமே தங்கம்
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான்? - அவை
  யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ! 3

மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை
  மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே - கிழப்
  பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம். 4

ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் - எனை
  அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
  சொல்லி வருவையடி தங்கமே தங்கம். 5

சோர மிழைத்திடையர் பெண்களுடனே - அவன்
  சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
  வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ! 6

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
  பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்
  பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே. 7

நேர முழுதிலுமப் பாவி தன்னையே - உள்ளம்
  நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்;
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு
  தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்! 8