அயோமுகிப் படலத்தின் பாடல்கள்

ஆரணிய காண்டம்
இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.
அயோமுகிப் படலம்
நெடு வரைச் சாரலில் இராம இலக்குவர் தங்கியிருத்தல்
துயர மிகுதியால் தூக்கமின்றி இருத்தல்
சீதையை நினைத்து இராமன் வருந்துதல்
சீதையைக் கவர்ந்த அரக்கனைத் தேட இராம இலக்குவர் முயல்தல்
அரண்டு, அருகும் செறி அஞ்சன புஞ்சம்
முரண்டன போல், இருள் எங்கணும் முந்த,
தெருண்ட அறிவில்லவர் சிந்தையின் முந்தி,
இருண்டன, மாதிரம் எட்டும் இரண்டும்.
இளிக்கு அறை இன் சொல் இயைந்தன, பூவை,
கிளிக்கு அறையும் பொழில், கிஞ்சுக வேலி,
ஒளிக் கறை மண்டிலம் ஒத்துளது, ஆங்கு ஓர்
பளிக்கு அறை; கண்டு, அதில் வைகல் பயின்றார்.
இலக்குவன் நீர் தேடிச் செல்லுதல்
அவ் இடை எய்திய அண்ணல் இராமன்
வெவ் விடைபோல் இள வீரனை, வீர!
இவ் இடை நாடினை, நீர் கொணர்க என்றான்;
தெவ் இடை வில்லவனும் தனி சென்றான்.
இலக்குவனைக் கண்ட அயோமுகி காமுறுதல்
எங்கணும் நாடினன்; நீர் இடை காணான்;
சிங்கம் எனத் தமியன் திரிவானை,
அங்கு, அவ் வனத்துள், அயோமுகி என்னும்
வெங் கண் அரக்கி விரும்பினள் கண்டாள்.
நல் மதியோர் புகல் மந்திர நாமச்
சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள்
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்;
மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள்.
அழுந்திய சிந்தை அரக்கி, அலக்கண்
எழுந்து உயர் காதலின் வந்து, எதிர் நின்றாள்;
புழுங்கும் என் நோவொடு புல்லுவென்; அன்றி,
விழுங்குவெனோ என விம்மல் உழந்தாள்.
இரந்தனென் எய்தியபோது, இசையாது
சுரந்தனனேல், நனி கொண்டு கடந்து, என்
முரஞ்சினில் மேவி முயங்குவென் என்று,
விரைந்து எதிர் வந்தனன், தீயினும் வெய்யான்.
உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள்; ஒன்ற
எயிற்றின் மலைக் குலம் மென்று இனிது உண்ணும்
வயிற்றள்; வயக் கொடு மாசுணம் வீசு
கயிற்றின் அசைத்த முலை, குழி கண்ணாள்;
பற்றிய கோள் அரி, யாளி, பணிக்கண்
தெற்றிய பாத சிலம்பு சிலம்ப,
இற்று உலகு யாவையும் ஈறுறும் அந் நாள்,
முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள்.
ஆழி வறக்க முகக்க அமைந்த
மூழை எனப் பொலி மொய் பில வாயாள்;
கூழை புறத்து விரிந்தது ஓர் கொட்பால்,
ஊழி நெருப்பின் உருத்தனை ஒப்பாள்;
தடி தடவ, பல தலை தழுவ, தாள்
நெடிது அடைய, குடர் கெழுமு நிணத்தாள்;
அடி தடவ, பட அரவம் இசைக்கும்
கடி தடம் உற்றவள், உருமு கறிப்பாள்;
இவை இறை ஒப்பன என்ன, விழிப்பாள்;
அவை குளிர, கடிது அழலும் எயிற்றாள்;
குவை குலையக் கடல் குமுற உரைப்பாள்;
நவை இல் புவித்திரு நாண நடப்பாள்.
நீள் அரவச் சரி, தாழ், கை, நிரைத்தாள்;
ஆள் அரவப் புலி ஆரம் அணைத்தாள்;
யாளியினைப் பல தாலி இசைத்தாள்;
கோள் அரியைக் கொடு தாழ் குழை இட்டாள்;
அரக்கியை யார் என இலக்குவன் வினவல்
நின்றனள், ஆசையின் நீர் கலுழும் கண்
குன்றி நிகர்ப்ப, குளிர்ப்ப விழிப்பாள்
மின் திரிகின்ற எயிற்றின் விளக்கால்,
கன்று இருளில் திரி கோளரி கண்டான்.
பண்டையில் நாசி இழந்து பதைக்கும்
திண் திறலாளொடு தாடகை சீராள்;
கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர்
ஒண்தொடி ஆம், இவள் என்பது உணர்ந்தான்.
பாவியர் ஆம் இவர், பண்பு இலர்; நம்பால்
மேவிய காரணம் வேறு இலை என்பான்;
மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய்!
யாவள் அடீ? உரைசெய், கடிது என்றான்.
அயோகியின் காம வெறி
பேசினன், அங்கு அவள் பேசுற நாணாள்;
ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான்,
நேசம் இல், அன்பினளாயினும், நின்பால்
ஆசையின் வந்த அயோமுகி என்றாள்.
பின்னும் உரைப்பவள், பேர் எழில் வீரா!
முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன்
பொன்னின் மணித் தட மார்பு புணர்ந்து, என்
இன் உயிரைக் கடிது ஈகுதி என்றாள்.
ஆறிய சிந்தையள் அஃது உரைசெய்ய,
சீறிய கோளரி கண்கள் சிவந்தான்;
மாறு இல் வார் கணை, இவ் உரை வாயில்
கூறிடின், நின் உடல் கூறிடும் என்றான்.
மற்று அவன் அவ் உரை செப்ப, மனத்தால்
செற்றிலள்; கைத் துணை சென்னியில் வைத்தாள்;
கொற்றவ! நீ எனை வந்து உயிர் கொள்ளப்
பெற்றிடின், இன்று பிறந்தனென் என்றாள்.
வெங் கதம் இல்லவன் பின்னரும், மேலோய்!
இங்கு நறும் புனல் நாடுதி என்னின்,
அங்கையினால் எனை, "அஞ்சலை" என்றால்,
கங்கையின் நீர் கொணர்வென் கடிது என்றாள்.
சுமித்திரை சேய் அவள் சொன்ன சொல் அன்ன
கமித்திலன்; நின் இரு காதொடும் நாசி
துமிப்பதன் முன்பு அகல் என்பது சொல்ல,
இமைத்திலள், நின்றனள், இன்ன நினைந்தாள்.
எடுத்தனென் ஏகினென், என் முழைதன்னுள்
அடைத்து, இவன் வெம்மை அகற்றிய பின்னை,
உடற்படுமால், உடனே உறும் நன்மை;
திடத்து இதுவே நலன் என்று, அயல் சென்றாள்.
அயோமுகி இலக்குவனை தூக்கிச் செல்லுதல்
மோகனை என்பது முந்தி முயன்றாள்;
மாக நெடுங் கிரி போலியை வவ்வா
ஏகினள்-உம்பரின் இந்துவொடு ஏகும்
மேகம் எனும்படி-நொய்தினின் வெய்யாள்
மந்தரம் வேலையில் வந்ததும், வானத்து
இந்திரன் ஊர் பிடி என்னலும், ஆனாள்;
வெந் திறல் வேல் கொடு சூர் அடும் வீரச்
சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள்.
ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி,
பூங் கழல் வார் சிலை மீளி பொலிந்தான்;
வீங்கிய வெஞ் சின வீழ் மத வெம் போர்
ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான்.
இப்படி ஏகினள், அன்னவள், இப்பால்
அப்பு இடை தேடி நடந்த என் ஆவித்
துப்புடை மால் வரை தோன்றலன் என்னா,
வெப்புடை மெய்யொடு வீரன் விரைந்தான்.
இலக்குவனைக் காணாத இராமன் துயருறுதல்
வெய்து ஆகிய கானிடை மேவரும் நீர்
ஐது ஆதலினோ? அயல் ஒன்று உளதோ?
நொ�தாய் வர, வேகமும் நொய்திலனால்,
எய்தாது ஒழியான்; இது என்னைகொலாம்?
"நீர் கண்டனை இவ் வழி நேடினை போய்,
சார் கொண்டு" என, இத்துணை சார்கிலனால்;
வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்பால்
போர் கொண்டனனோ? பொருள் உண்டு இது எனா,
அம் சொல் கிளி அன்ன அணங்கினை முன்
வஞ்சித்த இராவணன் வவ்வினனோ?
நஞ்சின் கொடியான் நடலைத் தொழிலால்,
துஞ்சுற்றனனோ, விதியின் துணிவால்
வரி விற் கை என் ஆர் உயிர் வந்திலனால்;
"தரு சொல் கருதேன்; ஒரு தையலை யான்
பிரிவித்தனென்" என்பது ஓர் பீழை பெருத்து
எரிவித்திட, ஆவி இழந்தனனோ?
உண்டாகிய கார் இருள் ஓடு ஒருவன்
கண்தான்; அயல் வேறு ஒரு கண் இலெனால்;
புண்தான் உறு நெஞ்சு புழுங்குறுவென்;
எண்தான் இலென்; எங்ஙனம் நாடுகெனோ?
தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய்-
உள்ளாய்! ஒரு நீயும் ஒளித்தனையோ?
பிள்ளாய்! பெரியாய்! பிழை செய்தனையால்;
கொள்ளாது உலகு உன்னை; இதோ கொடிதே!
பேரா இடர் வந்தன பேர்க்க வலாய்!
தீரா இடர் தந்தனை; தெவவர் தொழும்
வீரா! எனை இங்ஙன் வெறுத்தனையோ?
வாராய், புறம் இத்துணை வைகுதியோ?
என்னைத் தரும் எந்தைய, என்னையரை,
பொன்னைப் பொருகின்ற பொலங் குழையால்-
தன்னை, பிரிவேன்; உளென் ஆவதுதான்,
உன்னைப் பிரியாத உயிர்ப்பு அலவோ?
பொன் தோடு இவர்கின்ற பொலங் குழையாள்-
தன்-தேடி வருந்து தவம்புரிவேன்,
நின்-தேடி வருந்த நிரப்பினையோ?
என்-தேடினை வந்த இளங் களிறே!
இன்றே இறவாது ஒழியேன்; எமரோ
பொன்றாது ஒழியார், புகல்வார் உளரால்;
ஒன்றாகிய உன் கிளையோரை எலாம்
கொன்றாய்; கொடியாய்! இதுவும் குணமோ?
மாந்தா முதல் மன்னவர்தம் வழியில்,
வேந்து ஆகை துறந்தபின், மெய் உறவோர்
தாம் தாம் ஒழிய, தமியேனுடனே
போந்தாய்; எனை விட்டனை போயினையோ?
என்னா உரையா, எழும்; வீழும்; இருந்து
உன்னா, உணர்வு ஓய்வுறும்; ஒன்று அலவால்;
மின்னாது இடியாது, இருள்வாய் விளைவு ஈது
என் ஆம்? எனும், என் தனி நாயகனே.
நாடும், பல சூழல்கள் தோறும் நடந்து;
ஓடும், பெயர் சொல்லி உளைந்து; உயிர் போய்
வாடும் வகை சோரும்; மயங்குறுமால்-
ஆடும் களி மா மத யானை அனான்.
கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று
இமையாதவன், இத்துணை தாழ்வுறுமோ?
சுமையால் உலகூடு உழல் தொல் வினையேற்கு,
அமையாதுகொல் வாழ்வு? அறியேன் எனுமால்.
அரக்கியின் அலறல்
அறப் பால் உளதேல், அவன் முன்னவன் ஆய்ப்
பிறப்பான் உறில், வந்து பிறக்க எனா,
மறப் பால் வடி வாள் கொடு, மன் உயிரைத்
துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின்வாய்.
பேர்ந்தான், நெடு மாயையினில் பிரியா;
ஈர்ந்தான், அவள் நாசி பிடித்து, இளையோன்;
சோர்ந்தாள் இடு பூசல் செவித் துளையில்
சேர்ந்து ஆர்தலுமே, திருமால் தெருளா,
பரல் தரு கானகத்து அரக்கர், பல் கழல்
முரற்று அரு வெஞ் சமம் முயல்கின்றார், எதிர்
உரற்றிய ஓசை அன்று; ஒருத்தி ஊறுபட்டு,
அரற்றிய குரல்; அவள் அரக்கியாம் எனா,
இராமன் இலக்குவனை தேடிச் சேர்தல்
அங்கியின் நெடும் படை வாங்கி, அங்கு அது
செங் கையில் கரியவன் திரிக்கும் எல்லையில்,
பொங்கு இருள் அப் புறத்து உலகம் புக்கது;
கங்குலும், பகல் எனப் பொலிந்து காட்டிற்றே.
நெடு வரை பொடிபட, நிவந்த மா மரம்,
ஒடிவுற, நிலமகள் உலைய, ஊங்கு எலாம்,
சட சட எனும் ஒலி தழைப்பத் தாக்கவும்,
முடுகினன் இராமன், வெங் காலின் மும்மையான்.
ஒருங்கு உயர்ந்து, உலகின்மேல் ஊழிப் பேர்ச்சியுள்
கருங் கடல் வருவதே அனைய காட்சித் தன்
பெருந் துணைத் தம்முனை நோக்கி, பின்னவன்
வருந்தலை வருந்தலை வள்ளியோய்! எனா.
வந்தனென் அடியனேன்; வருந்தல், வாழி! நின்
அந்தம் இல் உள்ளம் என்று, அறியக் கூறுவான்,
சந்த மென் தளிர் புரை சரணம் சார்ந்தனன்;
சிந்தின நயனம் வந்தனைய செய்கையான்.
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன்,
ஈற்று இளங் கன்றினைப் பிரிவுற்று, ஏங்கி நின்று,
ஆற்றலாது அரற்றுவது, அரிதின் எய்திட,
பால் துறும் பனி முலை ஆவின் பான்மையான்.
நடந்தது கூற இராமன் வேண்டுதல்
தழுவினன் பல் முறை; தாரைக் கண்ணின் நீர்
கழுவினன், ஆண்டு அவன் கனக மேனியை;
வழுவினையாம் என மனக் கொடு ஏங்கினேன்;
எழு என, மலை என, இயைந்த தோளினாய்!
என்னை ஆங்கு எய்தியது? இயம்புவாய் என,
அன்னவன் அஃது எலாம் அறியக் கூறலும்,
இன்னலும், உவகையும், இரண்டும் எய்தினான்-
தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான்.
ஆய்வுறு பெருங் கடல் அகத்துள் ஏயவன்
பாய் திரை வருதொறும், பரிதற்பாலனோ?
தீவினைப் பிறவி வெஞ் சிறையில் பட்ட யாம்,
நோய், உறு துயர் என நுடங்கல் நோன்மையோ?
மூவகை அமரரும், உலகம் மும்மையும்
மேவ அரும் பகை எனக்கு ஆக மேல்வரின்,
ஏவரே கடப்பவர்? எம்பி! நீ உளை
ஆவதே வலி; இனி அரணும் வேண்டுமோ?
பிரிபவர் யாவரும் பிரிக; பேர் இடர்
வருவன யாவையும் வருக; வார் கழல்
செரு வலி வீர! நின்-தீரும் அல்லது,
பருவரல், என்வயின் பயிலற்பாலதோ?
வன் தொழில் வீர! "போர்வலி அரக்கியை
வென்று, போர் மீண்டனென்" என, விளம்பினாய்;
புன் தொழில் அனையவள், புகன்ற சீற்றத்தால்
கொன்றிலைபோலுமால்? கூறுவாய் என்றான்.
துளைபடு மூக்கொடு செவி துமித்து உக,
வளை எயிறு இதழொடு அரிந்து, மாற்றிய
அளவையில் பூசலிட்டு அரற்றினாள் என,
இளையவன் விளம்பிநின்று இரு கை கூப்பினான்.
தொல் இருள் தனைக் கொலத் தொடர்கின்றாளையும்,
கொல்லலை; நாசியைக் கொய்து நீக்கினாய்;
வல்லை நீ; மனு முதல் மரபினோய் என,
புல்லினன் - உவகையின் பொருமி விம்முவான்.
வருண மந்திரம் சொல்லி வான் நீர் உண்ணல்
பேர அருந் துயர் அறப் பேர்ந்துளோர் என,
வீரனும், தம்பியும் விடிவு நோக்குவார்,
வாருணம் நினைந்தனர்; வான நீர் உண்டு,
தாரணி தாங்கிய கிரியில் தங்கினார்.
கல் அகல் வெள்ளிடை, கானின் நுண் மணல்,
பல்லவம், மலர் கொடு படுத்த பாயலின்,
எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன்,
மெல் அடி, இளையவன் வருட, வீரனே.
இராமன் பிரிவாற்றாமையால் துயருறுதல்
மயில் இயல் பிரிந்தபின், மான நோயினால்,
அயில்விலன் ஒரு பொருள்; அவலம் எய்தலால்
துயில்விலன் என்பது சொல்லற்பாலதோ?
உயிர், நெடிது உயிர்ப்பிடை, ஊசலாடுவான்.
மானவன் மெய் இறை மறக்கலாமையின்
ஆனதோ? அன்று எனின், அரக்கர் மாயமோ?-
கானகம் முழுவதும், கண்ணின் நோக்குங்கால்
சானகி உரு எனத் தோன்றும் தன்மையே!
கருங்குழல், சேயரிக் கண்ணி, கற்பினோர்க்கு
அருங் கலம், மருங்கு வந்து இருப்ப, ஆசையால்
ஒருங்குறத் தழுவுவென்; ஒன்றும் காண்கிலென்;
மருங்குல்போல் ஆனதோ வடிவம், மெல்லவே?
புண்டரிகப் புது மலரில் தேன் போதி
தொண்டை அம் சேயொளித் துவர்த்த வாய் அமுது
உண்டனென்; ஈண்டு அவள் உழையள் அல்லளால்;
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ?
மண்ணினும், வானினும், மற்றை மூன்றினும்,
எண்ணினும், பெரியது ஓர் இடர் வந்து எய்தினால்,
தண் நறுங் கருங் குழல் சனகன் மா மகள்
கண்ணினும், நெடியதோ, கொடிய கங்குலே?
அப்புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என-
உப்புடை இந்து என்று உதித்த ஊழித் தீ,
வெப்புடை விரி கதிர் வெதுப்ப-மெய் எலாம்
கொப்புளம் பொடித்ததோ, கொதிக்கும் வானமே?
இன்னன இன்னன பன்னி, ஈடு அழி
மன்னவர் மன்னவன் மதி மயங்கினான்;
அன்னது கண்டனன், அல்கினான் என,
துன்னிய செங் கதிர்ச் செல்வன் தோன்றினான்.
நிலம் பொறை இலது என, நிமிர்ந்த கற்பினாள்,
நலம் பொறை கூர்தரும் மயிலை நாடிய,
அலம்புறு பறவையும் அழுவவாம் எனப்
புலம்புறு விடியலில், கடிது போயினார்.
மாங்கனி, தாழையின் காய், வாழையின் கனிகளோடும்,
ஆம் கனி ஆவதே என்று அருந்தி, நான் விரும்பி வைத்தேன்;
பாங்கின் நல் அமுது செய்மின் என்று அவள் பரவி, நல்கும்
தேம் கனி இனிதின் உண்டு, திரு உளம் மகிழ்ந்தான், வீரன்.
பாரிடமே இது; பரவை உற்றுறும்
பார் இடம் அரிது எனப் பரந்த மெய்யது;
பார், இடம் வலம் வரப் பரந்த கையது;-
பார் இடந்து எடுத்த மா அனைய பாழியாய்!
காவாய் என்பால், தன் ஐயரான் கைவிட வல்லேன்;
வேவா நின்றே நிற்க, இவ் வெய்யோற்கு இணை ஆவார்
நீ வா என்ன, அன்னது கண்டும், அயர்கில்லேன்;
போவேன் யானே; எவ் உலகோ, என் புகல் அம்மா!
என்று அவள் கூறலும், மைந்தனும், இன்னே
நன்றியதாய நறும் புனல் நாடி,
வென்றி கொள் வீரன் விடாய் அது தீர்ப்பான்
இன்று இவண் வந்தனன் என்று உரைசெய்தான்.