வீரபாகுவின் பெருந்தன்மை

வீரபாகுவின் பெருந்தன்மை

bookmark

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம், “மன்னா! இரவு பகலாக இவ்வாறு காட்டிலும், மேட்டிலும் நடு நிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது.

ஆனால் நீ தேடும் பொருள் உனக்குக் கிட்டும்போது, அதைக் கை நழுவ விட்டுவிடுவாயோ என்ற சந்தேகமும் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், வீரபாகு என்ற ஒருவன் இப்படித்தான் புத்தி தடுமாறி தவறு புரிந்தான். அவன் கதையை உனக்குச் சொல்கிறேன், கேள்!” என்றது.

தண்டகாரண்ய வனத்தில் முன்னொரு காலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு காட்டுசாதியினர் வசித்து வந்தனர்.

ஒருநாள், அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் ஒன்றுகூடி ஏரிக்கரையில் உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருக்கையில், ஏரியிலிருந்த மீன்கள் துள்ளிக் குதித்து நீரிலிருந்து எழும்பி மேலே வந்து, மீண்டும் ஏரிக்குள்ளே விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன.

அப்போது, கூட்டத்திலிருந்த ஓர் இளைஞன் மற்றவர்களை நோக்கி, “மேலே எழும்பித் துள்ளிக் குதிக்கும் இந்த மீன்களின் மீது குறி பார்த்து அம்பு எய்து கொல்ல முடியுமா?” என்று கேட்டான். அதற்கு மற்றொருவன், “முடியவே முடியாது! தண்ணீருக்கு மேலே அவை ஒரு வினாடிக்கும் குறைவாக துள்ளிவிட்டு, உடனே தண்ணீரில் குதித்து விடுகின்றன. அந்த ஒரு வினாடி நேரத்தில், ஒரு மீன் கூட குறிபார்த்து அம்பு எய்த முடியாது” என்றான். மற்றவர்களில் பலர் அதை ஆமோதித்தனர். பிறகு அவர்களுக்குள்ளே விவாதம் ஏற்பட்டது.

அப்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த நீலிமா என்ற மிக அழகான இளம்பெண் தன் மனத்திற்குப் பிடித்தவனான பிரதாப் என்ற இளைஞனைப் பார்த்து “நீ மட்டும் ஒரு மீனைக் குறி பார்த்து அம்பு எய்தினால், உன்னை நான் திருமணம் செய்து கொள்வேன்!” என்றாள். அவள் அவ்வாறு கூறியதும், கூட்டத்தில் பரபரப்பு உண்டாகியது. நீலிமாவின் அழகில் அத்தனை இளைஞர்களும் மயங்கி இருந்தனர். ஆனால் நீலிமாவின் மனத்தில் இடம் பிடித்தவன் பிரதாப் மட்டுமே! அவள் கூறியதைக் கேட்டதும் அவன் வில்லை நாணேற்றி, அம்பைத் தொடுத்து, குறிபார்த்து எய்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக அவன் இலக்கு தவறியது.

உடனே, சற்று தொலைவில் அமர்ந்திருந்த வீரபாகு என்ற இளைஞன் தன் வில்லில் ஓர் அம்பினைத் தொடுத்து எய்தான். அவன் எய்திய அம்பு ஒரு மீனின் மீது பாய்ந்தது. வீரபாகுவின் நண்பர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, அவன் நீலிமாவின் அருகில் வந்தான்.

“ஏய் அழகு சுந்தரி! நீ அறிவித்த போட்டியில் நான் வெற்றி பெற்று விட்டேன். ஆகவே என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்!” என்றான். அதற்கு நீலிமா, “திருமணமா? உன்னுடனா? ஒருக்காலும் இல்லை! முதலில் நான் இதைக் கூறியது பிரதாப்பை நோக்கித்தான்! தவிர, இதை நான் ஒரு போட்டியாக அறிவிக்கவில்லை” என்றாள்.

இல்லை! நீ அப்படிச் சொல்லவில்லை!” என்று மறுத்தான். வீரபாகு, அவனது நண்பர்களும் அவன் சொல்வதையே ஆதரித்தனர். அதிலும் குறிப்பாக கங்கா என்ற வீரபாகுவின் நண்பன் நீலிமா தன் வாக்குறுதியை மீறாமல் வீரபாகுவைத்தான் மணம் புரிய வேண்டுமென்று அடித்துக் கூறினான். “முடியவே முடியாது!” என்று நீலிமா கூச்சலிட, “நீலிமா! உன்னை நான் திருமணம் செய்தேத் தீருவேன்!” என்று வீரபாகுவும் சவால் விட்டான். பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

காட்டுசாதி மக்களிடையே இவ்வாறு அவ்வப்போது சண்டையும், பூசலும் ஏற்படுவதுண்டு. ஆனால் அவர்களில் ஒருவன் ஆபத்தில் சிக்கினால், மற்றவன் விரோதியாக இருந்தாலும், பகையை மறந்து அவனுக்கு உதவி செய்வான்.

ஒருமுறை, வீரபாகு மரத்திலேறி தேன் கூட்டைக் கலைத்து தேன் எடுக்க முயன்றபோது, திடீரென தேனீக்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு பயங்கரமாகத் தாக்கியபோது, அவன் நிலை தடுமாறி மரத்திலிருந்து விழுந்து விடவிருந்தான்.

அந்த சமயம் பிரதாப் அங்கே தற்செயலாக வந்து சேர, அவன் வீரபாகுவை தாங்கிப் பிடித்துக் கொண்டான். வீரபாகுவை ஆசுவாசப் படுத்திய பிறகு, பிரதாப் அவனிடம், “வீரபாகு! நீலிமா மீது உனக்கு மிகவும் ஆசை என்றால் அவளை நீயே மணந்து கொள்! ஆனால் அவள் உன்னை விரும்புகிறாளா என்று தெரிந்து கொள்!” என்றான்.

நீலிமாவின் பேச்சை எடுத்தவுடன், வீரபாகு கோபம் கொண்டான். “உன்னுடைய புத்திமதி எனக்குத் தேவையில்லை!” என்று விறைப்பாகக் கூறிவிட்டு அகன்றான். இது நடந்து சில நாள்களுக்குப் பின், இளைஞர்களும், இளம் பெண்களும் சேர்ந்து காட்டில் வேட்டையாடச் சென்றனர்.

அந்தக் கூட்டத்தில் நீலிமா, பிரதாப், வீரபாகு அனைவருமிருந்தனர். வேட்டையாடிய மிருகத்தை சமைத்து அனைவரும் சேர்ந்து விருந்துண்டனர். அப்போது திடீரென ஒரு புலி அந்தக் கூட்டத்தின் மீது பாய்ந்தது. அந்த சமயம் புலியைச் சற்றும் எதிர்பார்க்காத கூட்டத்தினர் அங்கிருந்த குன்றின் மீது தாவியேறி தப்பிக்க முயன்றனர்.