நகர் நீங்கு படலம் - 1872
1872.
‘புகழ் இடம், கொடு வனம் போலும், என்று, தம்
மகன்வயின் இரங்குறும் மகளிர் வாய்களால்,
அகல் மதில் நெடு மனை, அரத்த ஆம்பல்கள்
பகலிடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே.
‘புகல் இடம் கொடு வனம் போலும் என்று’- இராமனுக்கு இனித்
தங்கும் இடம்கொடிய வனம் என்று சொல்லி; தம் மகன் வயின் -
தம்முடைய மகனாகிய இராமனிடம்; இரங்குறும் - அவலிக்கின்ற; மகளிர்
வாய்களால் - அத்தேவியரது அமுது மேலும்சிவந்த வாய்களால்; அகல்
மதில் நெடு மனை - அகன்ற மதிலை உடைய பெரிய அரண்மனை;
அரத்த ஆம்பல்கள் - செவ்வாம்பற் பூக்கள்; பகலிடை - பகற்காலத்தில்;
மலர்ந்தது - மலர்ந்துள்ளதான; ஓர் பழனம் போன்ற - ஒரு வயலைப்
போன்று ஆயின.
வாய்க்கு ஆம்பல் உவமை. அழுதலால் மேலும் சிவந்த வாய்
செவ்வாம்பல் மலர்ந்தாற் போலும், பல்லாயிரம் தேவியர் அழுதலால் பல
செவ்வாம்பல்கள்பகலில் மலர்ந்த வயல் போன்றாயிற்று அரண்மனை
என்றார். ‘ஏ’ காரம் ஈற்றசை. 177
